அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்: 20 நேர்காணல்கள்
Author: ஷங்கர்ராமசுப்ரமணியன்
Publisher Name : Ethir Veliyeedu
யதார்த்தத்துடனான தீவிரமான ஈடுபாட்டைப் பத்திரிகையாளர் பணி ஏற்படுத்துவதாகச் சொன்ன காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நம்பிக்கையோடு முழுமையாக உடன்படுவதாகவே எனது இதழியல் பணி அனுபவம் உள்ளது. குழந்தைகள் இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், மனித உரிமைகள், மருத்துவம், சினிமா, சூழியல், சமூகவியல், அரசியல், அறிவியல் என எனது ஈடுபாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கான கல்வியாகவும் அதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இதழியல் இருந்துள்ளது. சுந்தர ராமசாமி வீட்டின் மேல்மாடியில் ஆவணமாகச் சேகரிக்கப்பட்டிருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் பழைய இதழ்களை நானும் நண்பன் தளவாய் சுந்தரமும் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் லட்சியத் தமிழ் இதழ் ஒன்றை நடத்தும் ஆசையைத் தொடர்ந்து எங்களுக்குள் வளர்த்திருக்கின்றன.
அப்படி ஒரு மாற்றிதழ்ப் பண்பாட்டைக் கனவாகக் கண்ட பலரின் பொது விருப்பம், தமிழில் தீராநதி, விகடன் தடம், இந்து தமிழ் திசை பத்திரிகைகளின் வாயிலாக யதார்த்தமாகவும் ஆனது. அந்த இயக்கத்தில் நானும் பங்குபெற்றதன் சுவடுகள்தாம் இந்த நேர்காணல்கள். மனுஷ்யபுத்திரன் தொடங்கிய உயிர்மை பத்திரிகையில் வந்த பல துறை ஆளுமைகளின் அனுபவங்கள் எனக்குத்தூண்டுதலாக இருந்திருக்கின்றன.