பீச்
Language : Tamil
Author: ஜி.கார்ல் மார்க்ஸ்
Publisher Name : Ethir Veliyeedu
இன்னொரு காலத்தின் புனைவு
நவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்.
மேற்கை ஒப்பிட, மூன்றாம் உலக நாடுகளின் விழுமியங்கள் பாரதூரமான வித்தியாசங்கள் உடையவை. பல வண்ணங்களும் குணங்களுமாய் ஒளிர்ந்தணைபவை. அவற்றில் ஓர் இடையீடு நிகழ்ந்திருக்கிறது. ஒரு சுபாவ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தக் கார்ப்பரேட் தன்மை நம் அன்றாடங்களையும் ஊடுருவத் தொடங்கி கால் நூற்றாண்டாகிறது. அவை பாரம்பரியமான மனித சுபாவங்களில், விழுமியங்களில், வாழ்க்கைப் பார்வையில் ஓர் ஊசலாட்டத்தை நிறுவியிருக்கின்றன. அது சரியா தவறா என்ற விவாதங்களுக்கு அப்பால் அதனூடாக விரியும் வாழ்வை அதை எதிர்கொள்ளும் மனிதர்களை பேசிச் செல்கிறது இந்நாவல்.
அதிகாரத்தின் நுண்ணிய அலகுகள், தனிமனிதர்கள் அதனூடாகச் செய்துகொள்ளும் சமரசங்கள், அதனால் உண்டாகும் கசப்பும் வெறுமையும் ஒரு சிதறல் தன்மையில் வெளிப்பட்டு பிறகு ஒன்றிணைந்த ஒன்றாகத் தோற்றம் கொள்கின்றன. நாவலின் இந்தச் சிதறல் பண்பு, உதிரித்தன்மை இன்னொரு புதிய காலத்தை, அதன் புதிய புனைவுப் பரப்பை உருவாக்குகிறது.
- சதீஷ்குமார் சீனிவாசன்