கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்
Author: சந்திரா தங்கராஜ்
Publisher Name : Ethir Veliyeedu
மனிதன் தன்னைப் பெரும்பாலும் நினைவுகளின் வழியேதான் மீட்டெடுக்கிறான். அவன் தன்னையும் தனது மனதையும் கடந்த காலத்தின் அறைகளில் பெரும்பாலும் தங்க வைத்து விடுகிறான். வாழ்வின் ஒவ்வொரு பரிணாமத்திலும் அந்த அறையைத் திறந்து தன்னைப் பார்க்கிறான். அந்தப் பழைய அறையில் கசக்கியும் சலித்தும் வீசப்பட்ட உடல், அந்த ஜீவிதம் நிகழ் காலத்தில் எப்படி உள்ளதென்று பயத்துடன் மட்டுமே பரிசோதனை செய்கிறான்.
ஆனால் 'கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள் நிறமுகங்கள்' நாவலில் வருகின்ற ஒருத்தி, தன்னையும் தனது கடந்த காலத்தையும் பொருத்திப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கின்ற உணர்வு பயம் மட்டுமல்ல ஆச்சரியமும்தான். இந்த நாவல் பேசும் நினைவுகளின் வழியே அன்பு பிறக்கிறது. குறுகுறுப்பு பிறக்கிறது. ஒருபடி மேலே எழுந்து அமர்ந்து பிரபஞ்சத்தை மாற்றிக் காட்டும் வித்தையும் நிகழ்கிறது.
இந்தக் கதை முழுக்க வரும் மனிதர்களும் அவர்களின் குணாதிசயங்களும் நிலப்பண்புகளோடு உளவியலாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. நினைவோடையின் ஆற்றில் மிதக்கும் சிறு இலைகளையும் அதன் ஆழத்தில் மௌனவித்திருக்கும் கூழாங்கற்களையும் ஒரே நேரத்தில் இந்நாவல் காட்சிப்படுத்துகிறது.
விவரணைகள் மூலம் கதையாடலை நிகழ்த்தும் புது முயற்சி ஆர்வத்தோடு நாவலை வாசிக்க வைக்கிறது .இதில் வரும் ஒவ்வொரு முகமும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு வாழ்வு. ஒவ்வொரு வாழ்வும் ஒரு மஞ்சள் நினைவு.
- ச. துரை