அக்கரைச் சீமையில்
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'அக்கரைச் சீமையில்'. ஒரு எழுத்தாளனின் வருகையை அறிவித்த இந்தத் தொகுப்பு, அந்தக் கதை ஆளுமையின் வளர்ச்சியையும் முன்னறிவித்தது. விதைக்குள் விருட்சத்தின் இயல்பு மறைந்திருப்பதுபோல சுந்தர ராமசாமி எழுத்தின் எதிர்காலக் குணங்கள் 'அக்கரைச் சீமையில்' தொகுப்பிலேயே முளைகொண்டிருந்தன.
ஆரோக்கியமான புதுமைப்பித்தன் பாதிப்பில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பின் கதைகள். இவையே முற்போக்கு இலக்கியத்தின் அசலான வகைமாதிரிகள். அதே சமயம் சுந்தர ராமசாமியின் பிற்காலக் கதையெழுத்தில் தெளிந்து தெரியும் வடிவக் கச்சிதம், உள்ளடக்கப் பொருத்தம், மொழி நேர்த்தி, மானுடக் கரிசனம் போன்ற ஆதார இயல்புகள் முதல் தொகுப்புக் கதைகளிலேயே வேரோடியிருக்கின்றன. 'தண்ணீர்' - கச்சிதமான வடிவம், அகம் - உள்ளடக்கப் பொருத்தம், 'முதலும் முடிவும்'-மொழி நேர்த்தி, 'கைக்குழந்தை' - புதிய உத்தி, 'கோவில் காளையும் உழவு மாடும்' - மானுடக் கரிசனம் என்று எளிதாக வகைப்படுத்தலாம்.
இந்த முன்னோடி இயல்பே இந்தக் கதைகளை இன்றும் நிகழ்காலத்திற்கு உரியவையாக நிலைநிறுத்துகின்றன.