ஜே.ஜே. சில குறிப்புகள்
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியை ஜே.ஜேயின்
மூளைக்குள் தள்ளிவிட வேண்டும். அவன் எழுத்தில் நம்மைப்
பற்றி, நம் இலக்கியம் பற்றிக் குறிப்பே இல்லை. ஏன்? எதுவும்
அவனிடம் போய்ச்சேரவில்லையா? நடுவில் பாஷையின்
சுவர்கள். மனிதனைப் பிளவுபடுத்தும் சுவர்கள். உண்மையைச்
சார்ந்து நிற்க வேண்டிய மனிதனை, சத்தத்திற்கு அடிமைப்
படுத்திவிட்ட முடக் கருவி. அதை நொறுக்கி விடலாம்.
அறியவும் அறிவிக்கவும் மனிதன் கொள்ளும் பேராசையின் முன்
தூள்தூளாகப் பறந்துபோகும் அது. வள்ளுவனின், இளங்கோவின்,
கம்பனின், பாரதியின் அவகாசிகளை எப்படிக் கணக்கில்
எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்? உலக அரங்கில்
கவிதைச் சொத்தின் பெரும் செல்வந்தர்களை எப்படிப்
புறக்கணிக்க முடியும்? எல்லோருக்கும் நம்மீது அலட்சியம்
கவிந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தேன்.
அவர்களிடம் போய்ச்சேரும் தமிழ்ப் படங்கள். அவர்களுக்குப்
பார்க்கக் கிடைக்கும் நாடகங்கள்.
நம் அரசியல்வாதிகளின் வாள்வாள் கத்தல்கள். என்ன
நினைப்பார்கள் நம்மைப் பற்றி?